Saturday 7 May 2016

வாழ்க்கை வாழ்வதற்கே



வண்ண மலர்த் தாமரைகள் கண்டேன் - அங்கு
   வந்து வளைந்தோடும் அலை தொட்டு விளையாட
கண்ணெதிரே  கோபுரமும் கண்டேன் - பக்கம்
   கற்கை நெறி ஓதுங் கலைக் கூடமொன்றும் கண்டேன்
விண்ணுயர்ந்த மாமலைகள் கண்டேன் - சுற்றி
   வீசிவருங் காற்றினொலி சத்தமிடக் கேட்டேன்
எண்ணமதில் இச்சை கொண்டு நின்றேன் அங்கு
  என்னை யொளி கொண்டயலில் ஏற்றமிடக் கண்டேன்
.
தண்ணிலவில் பொன்னொளித் தடாகம் - எழில்
   தன்னில் அது மின்ன அலை தென்றல் தொடஓடி
வண்ணமலர் .வாசனையும் ஏந்தி - அயல்
   வந்தெனையே தொட்டுவிட வாயடைத்து நின்றேன்
மண்ணிலிதை விட்டுமொரு வாழ்வா - என்று
    மங்கலமாய் உள்ளம்களி கொள் மயக்கம் கொண்டேன்
பண்ணி சைக்கும் ஆவலுடன் நானும்  ஒரு
  பாடும் குயிலன்ன வகை பாவம் கொண்டு நின்றேன்

உண்ணும் வகை தேனும் கனிவெல்லம் சேர்ந்து
   உள்ளதெனக் கொள்ளரிய தீஞ்சுவைப்பைக் கொண்டே
அண்ணளவாய் சொர்க்கமதை மேவும்- 0 ஒரு
   ஆற்றலுற உள்ளமதில் அழியலை போலும்
எண்ண மெழும் வேளை உயர்ந்தோடி அங்கு
   ஏற்றமிகு தோற்றமெழும் இன்பமதைக் கொண்டேன்
திண்ணம் ஒளிச்சக்தி தரும் வாழ்வில் - நானும்
   தென்றலெழும் திக்கிருந்து பாடுகிறேன் கீதம்


கண்ணருகில் தோன்றும் ஒருகாட்சி - அது
   காலமெனும் வெண்திரையில் தீட்டிதோ பார்நீ
வண்ணமெழ வானடியும் கொள்ளும் - அயல்
   வந்து மனம் பொங்கிடவே வீசும் எழில் காற்றும்
மண்ணிடையே மாண்பு கொண்டுவாழும் - மக்கள்
   மாற்றமின்றி அன்புகொண்டு வாழுகின்ற காலம்
எண்ணிலாத இன்ப வளம் சேரும் - அங்கு
    இட்டவிதி துன்பங்களை இடையிடையே தாரும்

விட்டுமதி கெட்டிடாது நாமும் - அந்த
   வேளைதனில் நம்மிடரை நாமெதிர்த்து மீண்டும்
பட்ட துயர் போக்கி வாழ்வு கொள்ளும் - ஒர்
    பக்குவத்தைப் போக்கினிலே கொண்டிருந்தால் நன்மை
சுட்ட சட்டி வல்லமை கொண்டாகும் - போல்
   சேர்ந்த துயர் தீயெரிக்க வெந்தெழுந்து வாழும்
இட்ட சக்தி தந்த வாழ்வில் தானும் - என்றும்
   எண்ணியிறை வேண்டிமனத் தீரம்கொள் நன்றாகும்

*

இருள் கொள்வதோ?





பனிமூடிப் பசும் புல்லும் பளிங்காகலாம்
பழிகூடும் அரச்சொன்று படைகாணலாம்
தனியோடும் முகில் மூடிச் சுடர் தாழலாம்
தரைமேவி இருள்மூடித் தடுமாறலாம்
கனிதேட இலைமூடும் காற்றோட நாம்
கனவோடும்  இமைமூடித் துயிலாகலாம்
இனி மூடி மனம் ஒன்று இருந்தாலுமே
இசைகொண்ட தமிழின்பம் இலையாகுமே

பணிகூடிப் பொழுதின்றிப் பகல்போகலாம்
பரிவின்றி மனைகூடிப் பலர் வாழலாம்
தணிவின்றிப் பெருஞ் சோகம் தனைவெல்லவும்
தமிழ்மீது வருந் தாகம் தலைகொள்ளவும்
மணியென்னும் இசைசந்தம்,மனமீதினில்
மறைகின்ற நிலைகொள்ள முகம் காண்பதோ
அணிகின்ற  துகில்ஆடை அழகாக்கலாம்
அகம்கொண்ட எழிலின்பம் அதை யாக்க வா

இனியில்லை எனும் எண்ணம் இடைவந்ததோ
இரவான போதில்விடி வில்லை என்பதோ
புனிதத்தை கொள்ளின்பம் பூஞ்சோலையும்
புயல் வந்து  விளையாடப் புவிசெ ய்வதென்
தனிவீழ்ந்தோம் என எண்ணல் தவறல்லவோ
தருமத்தின் செயலுக்கு அவம் அல்லவோ
குனியாது  நிலை கொள்ளக் குரலொன்று தா
குணமாக நில்லன்பைக் குறைவின்றித் தா

தமிழே சொல்லாயோ

தென்றலசைந்திடத் தேன்மொழி பேசிடும்
திங்கள் நிழலென வந்தாள் - அவள்
கன்னம் சிவந்திடக் கற்பனையால் எனைக்
கண்டு கலங்காதே என்றாள்
பொன்னை நிகர்த்திடும் மேனி யெழில் தன்னில்
பூவை இட்ட வண்ணமாக - அவள்
சின்னநடை கொண்டுவந்தவள் வந்துமுன்
சிந்தை மகிழ்ந்திட நின்றாள்

தென்னை யசைந்திடத் தேன்மலர் தூங்கிடச்
சில்லெனும் வண்டெழுந்தோட - வரும்
முன்னிலவை மறைதேகும் முகில் போலும்
மேவுங் கருங் குழலாட
புன்னகை பூத்தெனைப் கண்டுமனம்கொண்ட
பேதமை யெண்ணி வியந்தாள் - ஓர்
சின்னஞ் சிறுவனை நோக்குவதாய் என்னைச்
சொல்லெனச் சீண்டி மகிழ்ந்தாள்

அன்னையெனும் உயிர்த் தீந்தமிழே எந்தன்
ஆவிகலங்கிட நின்றேன் - இதில்
இன்னிசை தோன்றிட ஏழு மலர்களில்
என்முகம் கண்டு மகிழ்ந்தேன்
முன்னிருந்து கவிபாடும்நிலைதனும்
மீண்டும் முயிர்த்திடுமாமோ - இளங்
கன்னித்தமிழ் மகள்நீ யல்லவோ இதன்
காரணம் கூறிடவேண்டும்

மென்னிதழ் கொள்முகை கட்டு விட்டேநெகிழ்
வென்னும்  நிலைகொண்டாதாக - பழம்
தொன்மை வயதுடை கன்னித் தமிழ்மகள்
துல்லியமென் குரல்பேச்சில்,
அன்னியமல்ல உன் தன்மையிலேமனம்
எங்கலை பாய்ந்திட நின்றாய் - இந்த
இன்னல் கொண்டேங்கிட ஏது நினைந்தனை
உள்ளதியம்பிடு என்றாள்

உன்னையறிவேன் நல்உத்தமியே உனை .
இன்கவிதை கொண்டு போற்றும் - இந்தச்
சின்ன மனதினில்சேரும் புயலெழச்
சிந்தைபயம் கொண்டு நின்றேனென
மின்னல்களை அந்த மேகமதில் இட்டு
மோதுமெழில் காணும் சக்தி = உயிர்
பின்னலிலும் சிலவேடிக்கைகள் செய்து
பின்னின்று கண்டுநகைப்பாள்

என்னஇதுவென நானறியேன்  இசை
யேந்தும் முத்தமிழின் தேவி-  சுகம்
தன்னும் எழும் இசை கொள்வதினால் என்ன
இன்னல் விளைந்திடலாமோ
தின்னும் கனிதனில் வெல்லமிட்டாள் அந்த
தேன்சுவை கைப்பதுமுண்டோ -இது
என்னவகை என்று ஏளனம் செய்திசை
ஏழெனக் காட்டி மறைந்தாள்!

***நன்றி.(. இதுகற்பனை

Post title பாதைஒன்று பயணம் இரண்டு


 
காரிருள் பற்றிய கண்களிலே அந்தக் ’
  காட்சி தெரியவில்லை
நேரருள் தந்தவள் நெற்றியிலே சினம்  
   நேரும் நிலையுமில்லை
போரெனக் கீழே புரண்டெழு என்றதோர் 
   பேதமை தானுமில்லை
வாரவிழ் பூந்தளிர் போலும் மனதிலே 
   வந்ததென் தோன்றவில்லை

ஆயிரம் தந்தவள் ஆவியெனில் கொண்ட 
    அத்தனை எண்ணங்களில்
போயிருந்து செய்த போக்கினிலே என்ன 
   பூத்தது  அன்பின் வகை
வாயிருந்தும் சொல்ல வார்த்தையில்லை 
  வற்றிய தோ இலை யிலை
காயிருந்தும் கனிகொள்ள வில்லை 
   அந்தக் காரணம் சக்திநிலை

சேயெனவே நின்று காணுகிறேன் 
  எந்தத் தேசம் புதிய கலை 
தூயநிலை கொண்டு காணுகிறேன் எந்தன் 
  துன்பம் ஒழிந்த நிலை
தாயன்பு கொண்டதி னால் இதுவோ அட 
  சக்தியில் ஊற்று தனை
போயிருந்து காணப் பெற்றுவிட்டேன் எந்தன் 
   போக்கினில் சாந்தஎல்லை

மீதிகிடந்த வன் நோய்கள் கொண்ட தொல்லை 
  மாறியதாய் நிலைமை
ஏதிதில் என்மனம் கண்டது என்றுமே 
  இன்றுபோல் வந்ததில்லை
ஊதி வளரென்றே  உல்லாசத் தீயினை 
  ஓங்கிடச் செய்தவளை
யாது எனக் கண்டே வேண்டிட வந்தூற்றும் 
  மீண்டும் கவிதை மழை  

அந்தநாள்

வல்ல ஈழதேசம் அன்று வான்கதிர்க்கு நேர்நிகர்த்த
வாய்மைகொண்டு மக்கள் மண்ணைக் காக்க
சொல்லவே இனிக்கும் பேச்சு தூயநற் தமிழ்பொலிந்த
சோதியாக மின்னும் அன்பு கொண்டு
தொல்லையற்று நம்மைநாமே தோள் வலித்தவீரர்சூழ
தூக்கியகை வாளும்கொண்டு காக்க
எல்லையிட்டு நெல்வயல்கள் ஈரமுற்ற ஆழிசார்ந்த
மண்ணும் முல்லையோடு வாழ்வு கண்டோம்

நெல்வளைந்து மங்கை போலும் நீரில்தன் முகம்கணித்து
நீலவானின் செங்கதிர்க்கு நாணும்
வல்லகூச்சலிட்டும் ஓடி வானெழுந்து வட்டமிட்டு
வான்குருவி நெல்துணித்துக் காவும்
கல்லில் தெய்வரூபம் கண்டு கந்தன்வேலை முன்னிறுத்திக்
காணும் தெய்வக் கோவிலொன்று பக்கம்
இல்லை துன்பமென்று வாழ்ந்த எங்கள்தேச  மக்களன்றோ
இன்பங் கொண்டதோ மருதமாகும்

மென்னலைக்கு ஏற்ப ஆடும் மீன்பிடிக்கும் ஓடமேறி
மீண்டவர் கரையிலிட்டபோது
தன்வலைக்கு வீழ்ந்த மீன்கள் தான்துடிக்க கண்டுமாலை
தூயவள்அஞ் சும்விழிகள் நோக்கி
என்னதோ இரண்டுமீன்கள் என்னை தம்வலைக்குள்வீழ்த்தும்
ஈதொருநல் லற்புதம் என்றேங்க
வன்பகை முடிக்க வீரம் வாய்ந்த கப்பலோடும் மக்கள்
வாழ்க்கை நெய்தல் என்றதன்மை காணும்


சில்லென்றூதும் வண்டும்தேடும் செவ்விதழ்ப் பூ கானகத்தில்
சோவென்றோடி விழருவிகொட்டும்
கல்லின்மீது பட்ட நீர் தெறித்து சாரலாய் முகத்தில்
காதல் கொண்டு முத்தமிட்டே ஓடும்
எல்லைகாத்த வீரர் தூரம் இட்டசத்தம் வெற்றி கூறும்
ஏற்றதோர்  முழவின் ஓசை கேட்கும்
நல்லினித்த வாழ்வுகாணும் நாட்டுமக்கள் அச்சமின்றி
நாளுமன்று வாழ்ந்த காலம் யாவும்’

இன்றழிக்கத் தீயையிட்டு அள்ளிசாம்பல் மேட்டில் வீடு
அந்நியன் தன்சொந்தமென்று கட்டி
இன்பமென்று வாழ்ந்த வீடு எங்கள்மண்ணும் விட்டேயோடி
உண்ட நெல் விதைத்த காணி தோட்டம்.
இன்னமும் வலைபிடித்து ஏற்றவாழ்வி யைந்த மக்கள்
இல்லத்தோடு சொத்தும் சூறையாடி
கன்னமிட்ட வர்கரங்கள் காணும் ரத்தப்பூச்சு மாற்றக்
கைவிலங்கு போடும்நாளுமென்றோ

----------............

உலகம் உறவா பகையா?


 
தேனெடுக்கும் வண்டினமோ தென்றல்வர ஓடிவிடும்
  தேன்மலரில் பாசம் கொள்ளாது
தானெடுக்கும் பாதையிலே துள்ளிவரும் தென்றல் மணம்
  தந்த மலர் தன்னைக் கொள்ளாது
மீனெடுப்பில் துள்ளுமிரு மெல்லிழையார் கண்ணசைவில்
  மோகமுண்டு பொய்த்திடும் வாழ்வு
ஊனெடுக்கும் இன்பமென்றே எண்ணிவிடின் மாறித்துன்பம்
 ஏற்றமுறும் இச்சக வாழ்வு

வீடிருக்கும் வாழவிதி வெற்றிடமென் றாக்கிப் புயல்
  வீசுமதில் விளைவு பொல்லாது
கூடிருக்கும் கூட்டிலுயிர் கொண்டிருக்கும் கூடியது
  குற்றமென்றோ குளுமை பெறாது
ஆடிநிற்கும் மேனியிலே ஆணவத்தின் சாயலெழ
   ஆனந்தமோ கூடிவராது
கேடிருக்கும் செல்லும்வழி கொள்ளதுயர் மேவியின்ப
  கோட்டினைக்கால் கொள்ளவிடாது

பேடிருக்கும் பாட்டிசைக்கும் பக்கமதன் துணையிருக்கும்
   பேதமை மை யல் கொளும்வாழ்வு
ஓடி ரத்தம் சூடெழவே உள்ளிருந்து பொங்கும்வகை
   ஊற்றெடுக்கும் உறங்கவிடாது
காடிருக்கும் காட்டின்வழி கடையிருக்கும் விதியமைத்த
  காட்சிவழி மாற்றமிராது
கோடித்தனம் கொண்டிருந்தும் கொள்கைநெறி நேர்நடந்தும்
  கூற்றுவன்முன் வெல்ல விடாது

மேடிருக்கும் தாழ்விருக்கும் மின்னல்இடி கொண்டிருக்கும்
  மேதினியில் எம்மரும் வாழ்வு
கோடிருக்கும் தாண்டிமனம்  கொண்டிருக்கும் ஆவலது
  கோண்லிடும் நேர் நிமிர் வாழ்வு
நாடிருக்கும் நாட்டிற் பல நல்லவரும் கெட்டவரும்
  நண்பரெனக் கண்டிடும்போது
கூடிநிற்கும் காவலதும் குன்றித்திரிந் தாழமெனக்
  கொள்ளும் முரண் குணமிருக்காது

மூடிநிற்கும் பச்சைமரக் கூடலிலே கள்ளொழுகும்
  மென்மலர்கள் பூத்திடும் பாரு
தேடியுறை கொள்ளவென நீநடந்தால் தேளுடனே
  தீண்டும் விஷப் பாம்பு விடாது
வாடிநிற்கும் உள்மனதில் வந்ததுயர் நீங்கிடவே
  வண்ணவிரி வா ன்வெளி யாளும்
கோடியொலிப் பேரதிர்வின் கூற்றினிலே நீகலக்கும்
   கொள்கைதனைக் கைதொழு வேண்டு!


*******************

இது கேள்வி .? பதிலல்ல..!

       
 
ஆண்டஎங்கள் தேசந்தன்னை ஆளவென்று நாம் நினைக்க
அள்ளித்தீயை இட்டவரும் யாரோ
பூண்டசாமி யாரின்வேடம் போர்வைக்குள்ளே ருத்திராட்சம்
பூனையாகஎம் மிடம்வந்தாரோ
மீண்டும் எம்மை நாமே ஆள மென்னுடம்பில் வேர்த்தமேற்கு
மூண்டெழுந்த அச்சம் சேர்ந்ததாலோ
பூண்டைவேரி னோடுவெட்டிப் புற்பசுந்தரை கருக்கி
பேசும்செந் தமிழ்அழித்த பாரோ

ஆண்டியாக எம்மையாக்க ஆளுகென்றோர் வேடமிட்டு
அந்நியர் எம்மண் பறிக்கலாமோ
கூண்டினு ள்ளே போட்டடைத்துக் குற்றமற்ற மக்கள் மீது 
குண்டை வீசிக் கொல்லல்நீதி யாமோ
நீண்ட நாட்கள் பொய்யுரைத்து நேர்மையற்று வாய்மைகொன்று
நீறு கொள்ளவென்று தீ சொரிந்து
வேண்டி மண்பறித்து எம்மை வீதியிற் கிடக்க வைக்கும் 
வேந்தன்பக்கம் நூறு ஒன்று நாமோ

தோண்டியும் புயல் அழித்த தூயவர்தம் மேனி கண்டு 
தாண்டியும் பொறுத்தல் விட்டுக் கேட்க
தீண்டியும் விலங்கினத்தை  தீதினில் செய்மானம் ஒப்ப
தீந்தமிழ் அழிக்கக் கண்டும் தேசம்
சீண்டியே எழுப்பும்போதும் தோன்றிடுமாபத்தையெண்ணா
தூங்கியே கிடந்த சொந்தம் யாவும்
ஆண்டவன் எழுத்தேயென்றும் அன்னையர் துடிக்கக் கண்டும்
அந்நியம்மென் றெண்ணம்கொண்டுசோர

மாண்டவர் எழுந்திடா  ரிம் மக்கள் வீரம் குன்றவைத்து
மாபழந் தமிழ்மொழிக்குக் கேடு
வேண்டியே இழைத்த பூமி வெள்ளையில்சுண் ணாம்படித்து
விட்டதை மறைக்க ஏங்கும் போது
ஆண்டெனும் ஓர் நூறுசென்றும் ஆவதோ ஒன்ன்றில்லை யென்ற
ஆதங்கம் கொண்டின்னல் கண்டுமாள
நீண்டதோர் பொற்காலமொன்றில் நற்றமிழ் மண்கல்லுமற்ற
நேரத்தில் உண்டான தெல்லை காணும் ????

பாண்டியும் புலியென் றாடும் பாங்கினில் இபோரைக்கண்டு
பத்தினில் அறுவன் ஆங்கிலத்தை
நோண்டியுள் கலந்து பேசி நூதனப்பரிமாணத்துல்
நின்றிடில் தமிழ் சிதையக்காணும்
பூண்டினில் புல்லொடு வந்த போதிலும் காஞ்சோன்றி  எங்கள்
பொன்னெனும் இம்மேனி கொல்லப் பார்க்கும்
பாண்டியன் அச் சேரன் சோழன் பைந்தமிழ் வளர்த்துமென்ன
பாத்திருக்க வில்லும் மீன் என்செய்யும்  ???
******************

நானா அவன்


 
எனக்குள் ஒருவன் இருகின்றான் - அவன்
இன்பமும் துன்பமும் ரசிக்கின்றான்
கனக்கும் துயர்மனம் கொண்டாலும் - அவன்
களிப்பில் பஞ்சென மிதக்கின்றான்
தனக்கெனப் பாதை வகுத்தவனாம் - அவன்
தனிவழிப் பயணம் நடப்பவனாம் 
வனத்தில் மானென வாழ்பவனாம் - பகை’
வரும்போ தஞ்சா வீரனுமாம்

குணத்தில் கோட்டையின் மன்னவனாம் - அவன் 
குலவும் தென்றலின் இளமகனாம்
கணக்கில் கவிதையின் ஆற்றோட்டம் - இவன்
கனவை ஆக்கிடப் போராட்டம் 
மணக்கும் மல்லிகை வாசமதோ - இவன் 
மனமும் வாய்மைசொல் பூவனமோ 
கணத்தில் கற்பனை ரதமேறி - அவன்
கைதொடும் தாரகை ஒருகோடி

தடைகள் வருவது தானுடையும் - அவை
தண்ணீர்க் குளத்திடை குமிழிகளாம்
நடைகொள் பாதையில் குளிர்காற்று - அதில் 
நந்த வனம் எனும் உணர்வூற்று 
இடையில் ஒருமயில் நடமாடும் -அது
இன்னிசைக் கூத்திடக் குயில்பாடும்
விடைகள் தேடியே ஓடும்நதி - என
விளங்கும் வாழ்வின் போக்கினிலே

இடையே விதியும் எழுந்தாட  - இவன் 
எண்ணத் திசையினில் காட்சிமுரண்
மடையும் உடையா நீர்த் தேக்கம் - எனும்
மதியின்  பொறுமை தோற்றாலே
உடையின் உண்மைப் பிரவாகம் - அதை
உணர்வோ கண்டால் வலி சேர்க்கும்
படைகள் கொண்டெழுந் தணிசேர்வாய் - உன்
பழமைத் தமிழ்க்கவி இடர் வெல்லும்

*************************

மனத்தோட்டம்

 

கவிதை மலர்களும் காணும் மனதெழும்
  கற்பனைத் தோட்டத்திலே
புவியில் புலர்ந்திடும் பொழுதில் முகைவிடும் 
  பூக்களெனும் வகையே
செவியில் மதுவெனப் புகுமே இசையெழச் 
   சேரும் தமிழினிதே
குவியும் மலரிதழ் நெகிழும் விதம் மனம் 
    கொள்ளும் கவிதைகளே!

நிதமும் பூத்திடுமலராய் அழகுடன் 
  நினைவில் சுவை தருமே 
விதமும் உயிரிடை விளங்கும் உணர்வுகள்
  வெளிச்சம் தரும் அகலே
பதமும் பாங்கினில் இதமும் மகிழ்வெழப் 
   புதிதோர் சுகம் வருமே
உதயம் பொழுதெழும் கதிரின் ஒளிமிக
    உடையோர் பெருநிதியே
கவிதை கனிவது கலையின் எழுமனக்
   காட்சி பெருமிதமே
புவியில் கவிஞன்கண் பார்வை தரும்பொருள் 
  படைப்பில் தனிரகமே
குவியும் மனதிடை கொள்ளும் உணர்வுகள் 
   கீதம் இசைத்திடவே
கவிதை எனும்காட் டாற்றுடை வெள்ளம் 
   கட்டை மீறிடுமே

தவிப்பும் இளமையின் தாகம் மனமெழும் 
   துயரம் மகிழ்வுடனே
கவியின் பொருள் சினம் காதல் களிமனம்
   கனிவும் பெருகிடவே
செவிகொள் இழிமையும் சேரும் வியப்புகள்
    செழிக்கும் போதினிலே
குவிவன உணர்வுக் கிளர்வினில் கவிதை
     கொட்டும் அருவியதே

*****************

விழுந்தும் எழல் வேண்டும்


 
வலியெடுத்தும் அறமெடுத்தும் 
   பகைமுடித்த தமிழ இன்று
   வகை யடுத்து நடப்பதென்ன கூறு
கிலி பிடித்து குளிரெடுக்க 
   கிடுகிடென்று உடல்நடுங்க
   கீழ் கிடப்பதோ நினைந்து தேறு 
புலிவிரட்ட முறமெடுத்த 
   பெண்மணிக் கென்றான கதை
   புழுகிவைத்த பொய்தனுமோ அன்று
கலியெடுத்து தொகையுரைத்த
   களையெடுத்து தோள்பெருக்க
   கதைநிறுத்தி புதியவாழ்வு காணு

மலைசிறுத்தும் திடம்பெருக்கும் 
     மகிழ்வெடுத்துக் களம்புகுந்த
     மகன் குடித்ததனமறுக்க வென்று
தலை யடித்து கதறி மார்பில் 
     தான்விழுப் புண் தாங்கினானோ ’
     தவறிம் தன்முதுகில் இல்லையென்றே
 நிலை யெடுத்த வீரஅன்னை 
  நெறியெடுத்த பாவையர்கள் 
    நிறுத்தியும் உயிர் பறித்த கண்டும்
குலை நடுங்கிக் கிடந்ததென்ன 
     குரல் கொடுத்தும் அவனியெங்கும்
     கரங்கொடுக்கக் கதியுமற்றதென்ன
 
சிலையெடுத்த நிலை யிருப்பின் 
  சிறுமைதரும் வாழ்விலென்றும்
  சீறிஎழும் தன்மை கொஞ்சம் வேண்டும்
அலை யெழுந்து வீழ்ந்த பின்னே 
  அடங்கியுள்ளே கிடந்ததில்லை
  அதுவெழுந்து வளைந்து கரையேறும்
வலை விழுந்தபோது அஞ்சி 
   வாழ்விழந்த தென்று புறா
   வாடவில்லை வேடனை ஏமாற்றும்
தலைசிறந்த கதைகளிலே 
   தர்மவழிகாட்டும் அதைத்
   தனுமறிந்து ஒன்றெனக் கைகூடு


***********
 
வலியெடுத்தும் அறமெடுத்தும் 
   பகைமுடித்த தமிழ இன்று
   வகை யடுத்து நடப்பதென்ன கூறு
கிலி பிடித்து குளிரெடுக்க 
   கிடுகிடென்று உடல்நடுங்க
   கீழ் கிடப்பதோ நினைந்து தேறு 
புலிவிரட்ட முறமெடுத்த 
   பெண்மணிக் கென்றான கதை
   புழுகிவைத்த பொய்தனுமோ அன்று
கலியெடுத்து தொகையுரைத்த
   களையெடுத்து தோள்பெருக்க
   கதைநிறுத்தி புதியவாழ்வு காணு

மலைசிறுத்தும் திடம்பெருக்கும் 
     மகிழ்வெடுத்துக் களம்புகுந்த
     மகன் குடித்ததனமறுக்க வென்று
தலை யடித்து கதறி மார்பில் 
     தான்விழுப் புண் தாங்கினானோ ’
     தவறிம் தன்முதுகில் இல்லையென்றே
 நிலை யெடுத்த வீரஅன்னை 
  நெறியெடுத்த பாவையர்கள் 
    நிறுத்தியும் உயிர் பறித்த கண்டும்
குலை நடுங்கிக் கிடந்ததென்ன 
     குரல் கொடுத்தும் அவனியெங்கும்
     கரங்கொடுக்கக் கதியுமற்றதென்ன
 
சிலையெடுத்த நிலை யிருப்பின் 
  சிறுமைதரும் வாழ்விலென்றும்
  சீறிஎழும் தன்மை கொஞ்சம் வேண்டும்
அலை யெழுந்து வீழ்ந்த பின்னே 
  அடங்கியுள்ளே கிடந்ததில்லை
  அதுவெழுந்து வளைந்து கரையேறும்
வலை விழுந்தபோது அஞ்சி 
   வாழ்விழந்த தென்று புறா
   வாடவில்லை வேடனை ஏமாற்றும்
தலைசிறந்த கதைகளிலே 
   தர்மவழிகாட்டும் அதைத்
   தனுமறிந்து ஒன்றெனக் கைகூடு


***********

Thursday 11 February 2016

இயற்கை, தமிழ், இனிமை


சலசல வெனும் நதி யலைகள்
சரசர வெனவிழும் இலைகள்
கலகல வெனும் இனம் பட்சி
கடகட வெனும்நடை வண்டி
சிலுசிலு விழும்மழை சத்தம்
சிதறிடும் அலைகட லோசை
பலதிவை  ஒலிதரும் சந்தம்
பைந்தமிழ் கொண்டது மன்றோ
குலுங்கியும் தளம்பிடச் சுனைநீர்
குதிகின்ற சிறுகய லோசை
தளதள எழிற்தா மரைகள்
தாவிடும் தவளையின் சத்தம்
வளமுற இதழ் சுகம் தேடும்
வந்திடும் தும்பி ரீங்காரம்
துளையிடும் மூங்கிலில் வண்டு
தருமெழிற் சந்தங்க ளென்னே !
மலைகளில் எதிரொலி அதிரும்
மரமிருந் தொருகுயில் பாடும்
சிலை பொழி சிற்பிகள் உளியும்
சிறுவரின் அழுகுரல் ஒலியும்
வலையிழு மீனவர் சொல்லும்
வடிவெடு மாதரின் நடையில்
குலுங்கியே சிணுங்கிடும் மெட்டி
குவலய மிடைஇசை யன்றோ
தாய்மடி கருவினுள் சிசுவும்
தருமவள் இருதய ஒலியும்
சேயெனப் பூமியில் பிறந்து
சீருறத் கேட்கும் தாலாட்டும்
மாயவிண் வெளி தனின்ஓசை
மனிதனின் மாவுடல் மண்ணிற்
சாயவும் போடும் ஒப்பாரி
சகலதும் தமிழிசையன்றோ

Monday 11 January 2016

தெய்வத்தைத் தேடு


      
தெய்வத்தைத் தேடியும் காணவில்லை - யெந்தத்
திக்கிலும் நல்லருள் தோன்றவில்லை
உய்வதற் கோர்வழி எங்குமில்லை - யெந்த 
ஊரினில் தேடியும் பாசமில்லை
செய்வினை சாபங்கள் கேடு தொல்லை - யிவை  
சேர்ந்து இடர் தரும் பார நிலை
மெய்வருத்தம் சாவு மேலும் வதை - யிவை
மீளப் பிடித்தெம்மை ஆட்டும்நிலை

கையைப் பிடித்தனல் கொண்ட உலை - தன்னில்’
காயம் எரிந்திடத் தள்ளும் நிலை
நெய்யை மொண்டு ஊற்றிமேலும் தீயை - ஊதி
நீள வளர்த்திடு தீயின் எல்லை
பொய்யைப் படைத்தயிப் பூமியிலே - ஏனோ
மெய்யைப் படைத்ததை வேக வைத்தே
தொய்யப் பையில்  காற்றும் போகவிட்டால் - அதில் 
தோன்றும் நிலையென்ன ஆனந்தமோ

செந்தமிழ்த் தேனடை பொற்தமிழோ - எங்கள்
தேவை உயிர் கொள்ளும் வாழ்வுடைமை
தந்தவளே, இனி உன்படைப்பைக் - காக்க
தாமதமின்றியே செய்கடமை
மந்த மாருதமும் வீசிவர - மாலை
மாந்தர் சுகமெண்ணிக்  கூடிவர
அந்தர வான்வெளி கண்டிருக்கு - மெங்கள் 
அன்னையே ஆனந்தமாக்கிவிடு

கன்னங்கருங் காக்கைக் கூட்டமென - இங்கு
காணுமெருதுக ளோட்டமென
பென்னம் பெருஞ்சோலைப் பூமரங்க - ளிவை 
பேசரும் நல்லுணர் வோவியங்கள்
உன்னத ஒற்றுமைக் காணயிவை - சொல்லல்
உன்னரும் வாழ்வினில் காணும்வகை
நன்னெறிகற்று நல்லொற்றுமையில் - மனம்
நாளுமுயர் வெண்ணி வாழ்வையெடு

ஒற்றுமை யற்றவர் வாழ்வினிலே - என்றும்
உண்மைச் சுகந்தன்னைக் காண்பதில்லை
பற்றுமிகக் கொள்ளும் சுற்றமெனில் - அது
பாரில் பிழைத்திடும் முன்னைநிலை
மற்றும் எதுவின்பம் சேர்ப்பதில்லை - ஒரு
மந்திரமில்லை உன் வாழ்வு முறை
கற்றறிவாய் கூடி ஒற்றுமையைக் - கொள்ளக்
காணும் வெற்றி எனும் சக்திநிலை

**********

நானும் அரசன்தான்




நேரே நிமிர்ந்து நடப்பேனடா ஆனால்
நெஞ்சமோ  கூனலடா
பாரே புகழ்ந்திட ஆகுமடா ஆயின்
பாதி மடையனடா
ஊரேமனம் கொண்டு வாழ்த்திடினும்
இவனுள்ளம் சிறுமையடா
வேரே கிடக்குது வாடி யிவனொரு
வீழும் விருட்சமடா
தோல்வி யெனக் கென்றும் சொந்தமடா வெற்றி
தோள்களில் பாரமடா
கால்கள் இறங்கையில் ஓடுதடா மலை
ஏறத் தயங்குதடா
ஆலமரமென நான் வளர்ந்தால் புயல்
ஆட்டும் பின் வீழ்த்துமடா
கோலமதில் நானும் நாணலடா இனி
கொஞ்சமும் வீழேனடா
வேலைகள் செய்திடச் சோம்பலடா நானோ
வீதிக்கு ராசாவடா
மாலைதனில் மது வண்டெனவே மதி
கெட்டொரு மந்தியடா
சாலையில் சுற்றித் திரிவேனடா பல
சேட்டை புரிவேனடா
தோலை உரித்திட யாரும் வந்தால் பின்னே
தோப்புக் கரணமடா
கோவில்கள் வாசலில் பக்தனடா உள்ளே
கொள்கையில் நாத்திகன்டா
சேவைபுரிந்து வணங்கிடுவேன் தரும்
சாதம் வரைக்குமடா
நாவில் நற்கீத மிசைத்திடுவேன் அந்த
நல்லிசை ஞானம்கொண்டோன்
பாவினித்தோ குரல் தந்திடுவான் உதை
போடும் பொதி சுமப்போன்
நாளுமொரு போதும் பொய்யுரையேன் நானோ
நற்குண வேந்தனடா
ஏழுதனை இது எட்டு என்பேன் அது
எண்ணத்தின் மாற்றமடா
பாழுமுலக மெனைக்குறித்து இவன்
பைத்தியம் என்குதடா
ஊரை உலகேய்த்துப் பொய்சொன்னவன் மட்டும்
ஊருக்கு ராஜாவடா!
காதை அறுத்தவன், சங்கிலியைக் கொண்ட
கள்ளன் சிறையிலடா
மாதைக் கெடுத்தவன் மங்கை தீண்டஅந்தக்
மாயவன் உள்ளேயடா
தீதை இழைத் தில்லம் தீயிட் டெரித்தவன்
நீதியின் கையிலடா
ஈது அனைத்தையும் யாரொருவன் செய்தால்
நாட்டின் அரசானடா!

என் அன்னை, என்தேசம், என்கனவு

பகுதி 1
என்னோர் எழில்! நிலவோ ஏறிவான் வீதியிலே
மின்னும் தனதொளியை மேதினியி லூற்றுங்கால்
தன்னந் தனிநடந்து தங்கநில வொளிகுளித்து
முன்னே என்பாதையில் மேற்குவழி நடந்தேன்
வெண்மை நிலவொளியின் வீச்சினில் முன்னிருந்த
கண்முன் னெழில்தோற்றம் கைவரைந்த ஓவியமாய்
எண்ணக் கனவுகளில் எழுகின்ற மாயமெனும்
வண்ணம் கலந்திருக்க வழியில் அவள்கண்டேன்
மண்ணோடு தூசுபட மைவிழிகள் கோபமுற
விண்ணோ டெறித்தநிலா வீசுமொளி மின்னலிலே
பெண்ணின் திடமிழந்து பேசற்கரியவளாய்
திண்மை யிழந்து,வரும் தென்றல் உடல்சரிக்க
நின்றாள் துயர்பெருத்த நீள்விழிகள் நீர்சொரிய
தென்றல் தொடுந்தேகம் தீயெனவே வேகிவிட
கன்னம் எழில்சிதையக் கண்ணீரும் காய்ந்திருக்க
என்னோர் துயரடைந்தாள் ஏதறியேன் என்றதனால்
பெண்ணே பெருந்தகையே பெயரேது நானறியேன்
கண்ணீர் வழிவதுமென் காரணமும் தானறியேன்
மண்ணில்பெருவாழ்வு மாதுகொண்ட தாய்வதன
வண்ணம் தெரியுதம்மா வந்ததிங்கு ஏதென்றேன்
நெஞ்சம் அழுதுகொள நிர்க்கதியாய் ஏந்திழையோ
கொஞ்சம் எனதுகுரல் கொடுத்த மனத்துணிவில்
வஞ்சம் இழைத்தாரே வாழ்விலோர் சிங்கமகன்
நஞ்சின் நெஞ்சத்திரு நாட்டின் கொடியவனாம்
எந்தன் பெயரீழம் இன்பமுடன் தேன்தமிழைச்
சொந்தம் கொண்டே நிலத்தை சுற்றிவர மைந்தரவர்
வந்தோர் பகையறுத்து வாழ்வுதர வீரமுடன்
செந்தேன் தமிழ்வளர்த்து சீருடனே ஆண்டிருந்தேன்
பூவிரியப் புள்ளினங்கள் பொன்வானில் நீந்திவர
தாவிவிழுந் தோடும்நதி தமிழ்வாழ்த்தி இசைபாட
வாவிதனில் நீரோடி வட்டஅலைப் பூமலர
பூமிதனில் ஈழமெனும் பொன்நாட்டுக் கன்னையிவள்
என்னோர் அழகுடனே ஏற்றமுடன் நானிருக்க
வன்மை கொண்டேயுலகு வாழ்வை அழித்ததையோ
இன்னும் உயிர்களைந்து இதுபோதா ஊரழித்து
பொன்போலும் பூமிதனை பேய்வாழச் செய்தார்கள்
கொஞ்சங் குரல்நடுங்க கோதையுடல் தான்துடித்து
பஞ்சாம் முகில்நடுவே பாயுமிடி மின்னல்பட
நஞ்சின் கொடுமைகொண்ட நாகமொன்று தீண்டியதாய்
நெஞ்சம் துடிதுடித்து நினைவழிய மேலுரைத்தாள்

என் அன்னை, என்தேசம், என்கனவு 2

பகுதி 2
அந்தோ படுந்துயரம் அத்தனையும் என்சொல்வேன்
நிந்தை புரிந்தவரோ நெஞ்சழவே கேடுசெய்தார்
இந்தோர் நிலையடைய இன்னலிட்ட எத்தர்தனை
வந்தே விரட்டிவிடு வாய்மை நிலைநாட்டிவிடு      .
எங்கே உலகநீதி எங்கே உரிமையென்று,
செங்கோல் பிடித்தவர்கள் செய்வதென்ன கேட்டுவிடு
பொங்கும் தமிழ்க்குரலை பேச்சை நெரித்தழித்து
சங்கை எடுத்தூதி சாவைஎமக் கீந்ததென்ன
பொன்னால் மணிமுடியும் பெற்றதோர் வாழ்வும்
தன்நேர் நிகரற்ற தமிழ்வாழும் தேசமென
மின்னேர் விளைபுயலின் வேகமெடு மைந்தர்களும்
முன்னே துணையிருக்க முத்தமிழின்மூச்செடுத்து
பன்நூற் கலைவளங்கள்; பண்ணிசைகள் நற்றமிழாம்
முன்னோர் செய்காவியங்கள் மூத்தோர் பழங்கலைகள்
என்னை மகிழ்வுசெய்ய எத்தனையோர் இன்பமுடன்
மன்னர் மணிமுடிகொள் மாவீர ஆட்சிகண்டோம்
அணிகொள் அழகோடு அறத்தின் வழிநடந்தோம்
பிணிகொள் அரசுசில போரென்று நீதிகொன்றார்
பணியா உளஉரமும் பாதையிலே நேர்நடையும்
துணிவோ டுயர்மறமும் துள்ளிவரும் போர்முடித்து
குனியா துணர்வுபொங்க கொள்கைவழி நீதியுடன்
தனியாய்அரசுகண்ட தாயின்நிலை இன்றறிவாய்
இனியேன் மௌனமடா இன்னலிடும் பாதகரை
தனியோர் இனமழிக்க தட்டிப்பதில் கேட்டிடடா
ஈழமகள் கண்களிலே எழுந்தோடும் நீராறு
ஆழமன துன்பமதை ஆற்றாமை தான்விளக்க
வீழுமீர் பூங்கரங்கள் வீரமகள் கால்கள்தனும்
பாழும் பகைபிணைத்து பாடுபெருந் துன்பமிட்டார்
கேழாயென் சின்னவனே கீழாம்நிலை யடைந்தோம்
நாளுமவர் திட்டமிட்டே நாட்டின் குடிகொன்றார்
மாளுமிந்த மக்களுயிர் மகனேநீ காத்திடடா
வாழுமிக் காலமதில் வாசல்வரை தள்ளிவைத்தார்
நாளைஎமை வீதியிலே நாட்டோரம் ஆழ்கடலில்
சூழைதனில் தள்ளியெமை சுற்றிவரத் தீயிடுவார்
மாளமுழு தாயெரித்து மண்ணதனை கொண்டிடுவார்
வாழவென நீஎழுந்து வையகத்தை கேட்டுவிடு
இல்லையெனில் நீயறிவாய் எமதழகுத் தமிழ்த்தேசம்
வல்லோர் அரசுகளின் வாயிலுண வாகிவிடும்
மெல்லத் தமிழழியும் மேதினியில் என்பதனை
பொல்லாப் பெரும்புழுகாய் பூமியிலே ஆக்கிவிடு
துள்ளியெழு உன்னுயிரும் துடிக்கத் துணிவுடனே
தெள்ளுதமிழ் வெல்லுமொரு திக்கைக் கருத்திலெடு
கள்ளினிமை பூமென்மை காற்றின் சுகம்யாவும்
உள்ளதமிழ் வாழஇனி உன்கடமை ஆற்றிவிடு
மங்கும் மதியொளியில் மங்கையவள் சொல்லிவிட
எங்கோ இருந்தெழுந்த  இடியோடு புயலெனவே
பொங்கும் பெருஞ்சுழலோ பூவையவள் முன்னுருள
தங்கஒளி தானுருக்க தலைமறைந்து போயினளாம்
--அன்புடன் கிரிகாசன்

யார் அழைப்பது?


தேவன் கோவில்மணி ஒலிகின்றது- ஒரு
தீபம் அசைவதங்கு தெரிகின்றது
பாவம் கணக்கெழுதி முடிக்கின்றது= ஒரு
பாலம் விழி எதிரில் பிறக்கின்றது
வாவென்றிரு கரங்கள் அழைக்கின்றது- ஒரு
வாசல் திறப்பதங்கு தெரிகின்றது
போவென் றெனைவாழ்வு சினக்கின்றது- நான்
போகும் பாதை விளக் கொளிர்கின்றது
பாசம் விழிகளினை மறைகின்றது- ஒரு
பாரம் மனதில் சுமை கனக்கின்றது
நேசம் இருந்துவிடக் கேட்கின்றது- என்
நெஞ்சம் போராடித் தோற்கின்றது
கூடி இருந்த உடல் துடிக்கின்றது -அதன்
கோலம் எதை நினைத்து சிரிகின்றது
ஏடும் கதை தொடரும் எழுதியதை- புள்ளி
இட்டு முழுதும் என முடிக்கின்றது
ஓடும்நதி கடலில் கலக்கின்றது- அதன்
ஓசைஅடங் கமைதி பிறக்கிறது
வாடும் மனது இனி வசந்தம்மென- தனை
வாட்டும் கடும்துயரைப் பழிக்கின்றது
சேரத் திரிந்தநிழல் பிரிகின்றது- தினம்
செய்யும் மணியொலியும் சிதைகின்றது
தேரும் வழியில் தடம் புரள்கின்றது- சென்ற
திக்கில் தெருமுடிந்து கிடக்கின்றது

கிரிகாசன்

நான் கண்ட ஆனந்தம்!

கோவிலோ கூடமோ மாளிகையோ -இது
 கொற்றவன் நிற்கவே மாடமதோ
மாவிலை கட்டிய தோரணமோ -இம்
 மன்னவன் சாயச் சிம் மாசனமோ
தேரிலே சுற்றிடும் ஆனந்தமோ -அது
  தென்றலே றிவிளை யாடிடுதோ
பூவிலே தொங்கும்பல் மாலைகளோ -இடை
  பூத்ததும் வானத்துத் தாரகையோ
ஏறியே ஓடவே மேகங்களோ -இந்த
   ஏழையை சுற்றியும் தேவர்களோ
கூறியே கொட்டினர் பூமழையோ -இவன்
    கொண்டது வாழ்வில்பெரி தல்லவோ
பேறிலே நல்லதோர் பேறிதுவோ -அவன்
   பிரம்மனும் எண்ணாப் பெருங்கொடையோ
மாறியே கொள்ளும் பகலிரவோ -இம்
   மாற்றம்மென் வாழ்வில் பெருங்கனவோ
அன்பினில் இனிய செந்தமிழே -என்
   ஆவி கலந்திட்ட பொன்மகளே
என்பிலும் ஊடேஓர் தீஎரிதே -இதில்
     இன்ப நினைவும் பெருகிடுதே
பொன்னெனும் வெண்ணிலா பூத்திருக்க -அயல்
    பொய்கையில் நீரலை ஆர்ப்பரிக்க
சின்னஇசை கொண்டு தென்றல்வர -அதில்
    செவ்விதழ் பூமணம் சேர்ந்துவர
மின்னும் மத்தாப்பென வண்ணவெடி எந்தன்
   மேனியில் இன்பமாம் பூச்சொரிய
கண்ணிலே ஆனந்த நீர் பெருக -இது
   கற்பனையென் றுள்ளம் கேலி செய்ய
தன்னிலே சொர்க்கம் தரைநழுவி..வந்து
   தாழுதே காலடி தாங்கிடுமோ
என்னிலேஅன்பு கொள் செந்தமிழே இனி
   இங்கிவன் உன்மடிப் பிள்ளையன்றோ!
மகி

கண்டால் சொல்வீரோ ?


தேடுகிறேன் காணவில்லை தேன்மலரே நீயெங்கும்
வாடும் தமிழனுக்கோர் வழிஒன்று கண்டதுண்டோ
கேடும் துயரங்களும் கெட்டுமனம் சோர உயிர்
ஆடுமொரு ஊஞ்சலென ஆவியலைந் தோடுகிறான்
வெள்ளைநிற மல்லிகையே விதிதானும் இவ்வழியே
அள்ளிப்பெ ரும்புயலாய் அடித்தோடக் கண்டனையோ
நள்ளிரவில் கொல்லுவதும் நாடுபெருந் தீயெரியக்
கொள்ளிவைத்துக் கொல்விதியை கூப்பிட்டு சொல்லிவிடு
கூவி இசைத் தேன்படிக்கும் கோகிலமே இவ்வழியில்
காவியுயிர் தோள்சுமந்து காலன்வரக் கண்டனையோ
ஆவி,உடல் தான்பிரித்தே அள்ளுமுயிர் கொஞ்சமில்லை
சாவு இனிப்போதுமென்று சற்றே நிறுத்தச் சொலு
கார்இருளின் நேர்முகிலே கனத்தோர் மழைபொழிய
நீர்அருவி ஆறெனவே நீபோகும் மண்ணதிலோ
ஊரை அழித்தவனால் உதிரமது பெருகி நதி
ஆறாகி ஓடவைத்தோன் அழிய இடிவீழ்த்தாயோ
வட்டச்சு னைநடுவில் வந்த’அலை’ காலுதைக்க
பட்டதுயர் தான்மறந்து பங்கயமே ஆடுகிறாய்
தொட்டபகை காலுதைக்கத் தூயதமிழ்த் தம்பிசிலர்
விட்டமொழிக் காடுவது விந்தைஉனைக் கற்றதிலோ
ஊரின்எழில் பார்த்துலவும் ஓடுங்கார் வான்முகிலே
நீரைப்பொழிய முன்னே நின்றுபதில் சொல்லிடுவாய்
ஊரை உறவுகளை உத்தமரைக் காக்கவெனப்
போரைநடத் தியவர் போனவழி கண்டதுண்டோ
காற்றின் சுதந்திரமும் காணுமதன் விடுதலையும்
பேற்றில் பெரும்பேறாய் பேசிடுவர் எனையெண்ணி
நேற்றோ பூந்தென்றலென நின்றவர்கள் நீதிக்காய்
சீற்றப்புய லாகிப்பின் சென்றதிசை கண்டவர் யார்?
பூவே, விரிவானே, போகும்முகில், புள்ளினமே
நாவே நறுந்தமிழை நல்லிசைப்போர் கொன்றுஒரு
சாவே பிடியென்று சுற்றும்புவி தந்திடினும்
போ,வீறு கொண்டிவரோ புத்தீழம் செய்திடுவர்!

காதல் கொள்ளுவளோ? கொல்லுவளோ?

தெண்ணிலவு வானுலவத் தேகங்குளிர் கொள்ளும்
கண்மயங்கிக் காதல்கொளக் கன்னியரைத்தேடும்
பண்ணிசையோ காற்றெழுந்து பாடுமொலி கேட்கும்
அண்ணளவாய் இன்பந்தரும் அந்திவேளை தன்னில்
மஞ்சள் வெயில் மாலைசுகம் மயங்கு மந்தவேளை
மஞ்சமதில் சாய்ந்தவனோ மதிமயங்க நின்றேன்
கொஞ்சுமிளங் குருவிகளின் குறுகுறுத்தஓசை
கூடிஅவை மகிழுகின்ற குரல்வெளியே கேட்டேன்
சின்னதொரு கிண்ணமதில் திராட்சை ரசம் உண்டேன்
செவ்விழிகள் நீர்வழிய சிற்றிடையாள் அவளோ
கண்கலங்கி நிற்பதனைக் கண்டணைக்கச் சென்றேன்
கரமெடுத்து சென்றவனோ கணம் வியந்து நின்றேன்
வண்ண மலர்க் கண்ணழகுப் பெண்ணவளோ முன்னால்
வாசமெழக் குளிரெடுத்த பூவெனவே நின்றாள்
எண்ணமதிற் சித்திரமோ இல்லை சிலைதானோ
எழில்வடிவம் தீட்டியதோர் இயற்கை மகள்தானோ
பொன்னுதட்டிற் பூஅலர்ந்து பொங்குமெழில் வண்ணம்
புதுமெழுகில் வார்த்தமுகம் பஞ்செனவே கன்னம்
தென்னையிலை தென்றலுக்கு தலைஅசைத்து மின்னும்
தன்மையிலே இடையசையத் தாகமுடன் பார்த்தாள்
வஞ்சிமனம் வைத்த துள்ளே என்னவென்று அறியேன்
வாசனைக்கு பூமறந்து வந்த வண்டைக் கண்டேன்
நெஞ்சிலெழும் இச்சைதனை நீலவிழிப் பார்வை
நெளிபுருவ வில் வளைத்து நினைவழிய எய்தாள்
தேரிலேறி திங்களுலா தோன்றும் எழில்வண்ண
திருமகளின் ஒரு உறவு திரும்பியெனைக் காண
போரிலேதும் இல்லையெனப் பிழைத்தவனைப்போல
பேச்சிழந்து மூச்சிரைத்து பேசும்குரல் கேட்டேன்
சின்னவளே இப்படிநீ சீறும்விழி கொண்டு
செந்தணலாய் நிற்பதுஏன் சென்றுவிடு உந்தன்
புன்னகையிலற் கொல்லுகிறாய் போதுமடி பெண்ணே
பூவுடலில் காணுமெழில் பித்தமிடக் கண்டேன்
கன்னியவள் நேர்திரும்பி கண்களெனைப் பார்த்து
கனியுதடைக் கடித்து ஒரு கள்ளநகை பூத்து
என்னிதயங் கொண்டவரே இன்றுமது வாழ்வு
எல்லைவந்து சேர்ந்ததடா கொல்லுகிறேன் என்றாள்
அஞ்சி மனம் பதைபதைக்க அவளெழுந்துமுன்னே
ஆடுமொரு பாம்பெனவே  அகமெடுத்த நஞ்சும்
வஞ்சியொரு கையில் சிறு வாளெனவே கத்தி
வைத்தபடி காலெடுத்து வந்துவிடக் கண்டேன்
அத்தனையும் சொத்து பணம் ஆசைகொண்டு வந்தேன்
ஆடுவரை ஆடியுனை அன்பு கொள்ளவைத்தேன்
இத்தரையில் எண்ணியதை இறுதியிலே வெல்வேன்
இறைவனைநீ தொழுது நில்லு இறுதி மூச்சுஎன்றாள்
புன்னகைத்த பொன்னிலவோ பேரிடியாய் நிற்க
பூவிழிகள் மின்னியொரு புயலெனவே கண்டேன்
இந்தவேளை பார்த்தவரோ இனித் ’தொடரும்’ போட்டார்
எழுந்து தொலைக்காட்சி தனை எரிச்சலோடு அணைத்தேன்

முத்துத்தமிழ் இனம்


முத்துத்தமிழ் சத்தம் இடுமினம்
வெட்டித்தலை கொத்திக் கிழியென
சட்டம்ஒரு சுற்றும் புவியிடை உளதாமோ
சொத்துக்களைத் தட்டிப் பறியிவர்
கற்பைக்கெடு, குத்திக் கொலையென
புத்தம்மதம் கற்கும் விதிமுறை உளதாமோ
கொத்துக்குலை மொத்தத் தமிழரும்
கத்திக்குரல் சத்தமிட ஒழி
மக்கட்தலை சுட்டுக் கருகென வெடிபோடு
சுற்றும்பெரு யந்திரப் பறவையும்
சுற்றிப்பொது பொத்து பொதுவென
கொட்டும்இடி குண்டுப் பெருமழை பொழிந்தாக
முற்றும்அழி மக்கள் முழுவதும்
திக்குத்திசை விட்டுத் திரிபடும்
சிக்கல்பட நச் ஒற்றைத் தமிழனும்
சற்றும் விதிபெற்றுக் குறைஉயிர்
உற்றுக்கொள வெட்டிக் குழியிடு எனவாக
கத்திக்குடிசுக் கலவையை எறிந்தானே
வெட்டித்தலை கொட்டக் குருதியும்
பட்டுத்தெறி ரத்தக் கறையதும்
சுட்டுக்கொலை யுற்றுக் கலிபட புவிதானோ
பட்டுக்கிட செத்துத் தொலையென
சொட்டும்மனம் இரக்கப் படவிலை
சட்டம்ஒரு முற்றும் குருடென விழிமூட
பத்தும்பல கட்டுக் கதைகளை
விட்டுப்பலர் புத்தித் திரிபட
சுத்தம்மனம் புத்தன் மகனென உலகெண்ண
செத்தும்விழும் ரத்தப் பிணமதை
கொத்திகுடல் தின்னுங் கழுகதின்
வர்க்கம் இவன் வெட்டக் குலையென வீழ்ந்தோமே
பக்கம்இரு ரத்தக் கொலைவெறி
யுத்தப்பிரி யெத்தன் அரசது
கத்தையெனக் கட்டுப் பணமது கரமீய
மத்தம்பிடி பித்தன் கொலையிடு
வித்தைதனை மெத்தப் பழகிய
குத்துக்கொலை மன்னன் தலையிடு முடிவீழ
விட்டுத்துயில் தட்டுக் கதவினை
சட்டத்துறை தக்கப் பதிலிடும்
குற்றந்தனை சொல்லிக் கொடு,பதில் நீகேளாய்
வெட்டிக்குடல் ரத்தக் குடியனை
சட்டத்தவர் இட்டுச் சிறையிடை
குற்றந்தனை ஒத்துக் கொளும்வரை விலகாதே
கட்டித்தடி வெள்ளை கொடியுடன்
விட்டுச்சுடும் வீரக் குழலதும்
வைத்துத்தனி வெற்றுக் கரமுடன் இவர்போக
கட்டிக்கயி றிட்டு கொடுமைகள்
சுட்டுத்துடி கொள்ளக் கடும்வதை
இட்டுக்கொலை செய்யும் கயவரை விடலாமோ
வெட்டித்தமிழ் மக்கள் கொலையிட
கத்திக்கிலி பற்றிக் கதறிய
மொத்தக்குரல் விட்டு போவென விடுமாமோ
வட்டிச்சக மொத்தத் தொகைபெற
கத்திக்குரல் விட்டுக் கதறிட
பட்டுத்துயர் முட்டச் சிறையிடை தள்ளாயோ
ஒற்றைக்கரம் கொண்டே உருவிய
வெட்டுக்கொலை வாளைச் செருகிட
பக்கம்அணைந் தன்பை முதலினில் பரிவாக
பெற்றுப்பல வெற்றுக் கதைகளை
விட்டுப்புறம் வெட்டத் துணிவுற
வட்டக்கதிர் முற்றும் மேற்கிடை மறைவானே
அச்சம்இலை சற்றுப் பொறுபொறு
சுற்றும்ஒளி மற்றத் திசைதனில்
எட்டிக்கதிர் விட்டே விடியலில் எழுந்தேகும்
திட்டமிடு துட்டர் தனையது
சட்டம்எமை முற்றும் புரிந்திட
எட்டுத்திசை மெச்ச பிறந்திடும் தமிழீழம்